Breaking News

வர்த்தகரின் உயிரை பறித்த மண்ணெண்ணைய் வரிசை


வீட்டுக்கு தேவையான மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த ஹட்டன் நகர வர்த்தகர் ஒருவர், இன்று (27)  அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹட்டன்- தும்புறுகிரிய வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான தேவநாயகம் கிருஸ்ணசாமி என தெரியவந்துள்ளது.

ஹட்டன் நகரில் வாடகைக்கு கடையொன்றை பெற்று வர்த்தகத்தில் ஈடுபடும் குறித்த நபர், நேற்று (26) இரவு 7மணியளவில் மண்ணெண்ணையைப் பெறுவதற்காக, எரிபொருள் நிலையத்துக்கு சென்று, சுமார் 12.30 மணியளவில் வீட்டுக்கு வருகைத் தந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

வீட்டுக்கு வந்த குறித்த நபர், தனக்கு அதிகம் சோர்வாக இருப்பதாக தெரிவித்துடன், வாந்தியும் எடுத்த பின்னர், நித்திரைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் அதிகாலை தனது கணவர் நித்திரையிலேயே உயிரிழந்துள்ளதாக  தெரிவித்துள்ள அவரது மனைவி, இதற்கு முன்னர் தனது கணவருக்கு எவ்வித நோய்களும் இருக்கவில்லை என்றும் மண்ணெண்ணெய் பெறுவதற்காக பல மணி நேரம் காத்திருந்தமையாலேயே தனது கணவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். (Vavuniyan) 

No comments